Friday, 25 July 2014

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வழங்க திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதும் ஜோதிடர்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வழங்க திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதும் ஜோதிடர்



பொள்ளாச்சி:கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்க, ஜோதிடர் ஒருவர் திருக்குறளை ஓலைச்சுவடியில் மறுசுவடியாக்கம் செய்துள்ளார்.பொள்ளாச்சி அடுத்துள்ள டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஜோதிடர் தெய்வசிகாமணி, ஓலைச்சுவடியில் திருக்குறளை எழுதியுள்ளார். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள 1,330 குறள்களையும் ஓலைச்சுவடியில் எழுதி நிறைவு செய்துள்ளார். இவர், கோவையில் ஜூன் மாதம் நடக்கவுள்ள <உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இதனை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தெய்வசிகாமணி கூறியதாவது:ஓலைச்சுவடிக்கு அழிவே இல்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. தற்போதும், ஓலைச்சுவடியில் ஜாதகம் எழுதுவது சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. கம்ப்யூட்டர் காலத்தில் நவீன வசதிகள் நிறைய வந்து விட்டது. ஆனாலும் ஓலைச்சுவடிக்கான மகத்துவம் குறையவில்லை. ஆனால், ஓலைச் சுவடி பயன்பாட்டில் அதிகம் இல்லாததால்,மக்களிடையே ஓலைச்சுவடி பற்றிய விழிப்புணர்வு இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருக்குறளை எழுதி நிறைவு செய்துள்ளேன். ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ் செம் மொழி மாநாடு நடக்கும் போது, அங்கு திருக்குறள் ஓலைச்சுவடியை சமர்ப்பித்தால் பழமைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் 1812ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. திருக்குறள் புத்தக மாக்கப் பட்டு 192 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இவ்வாறு, தெய்வசிகாமணி கூறினார்.

0 comments:

Post a Comment